Tuesday, 13 August 2013

தனிமரம் ஒருபோதும் தோப்பாகாது



பொதுவாக நாம் அன்றாட வாழ்வில் இனம்,குளம்,கோத்திரம் ,பிரதேசவாதம்,மதவாதம் என்று பழக்க வழக்கில் எடுத்துக் கொண்டோம்,அவை தனி மனித வாழ்வில் மாத்திரமின்றி சமூக வாழ்விலும் கூட,ஏன் எமது தலைவர்கள்,முஸ்லிம் அரசியல்வாதிகள் என பரவலாகவும்,வெளிப்படையாகவும் மலிந்து விட்டன என்பது சாலப்பொருத்தம்.
வாழ்வியல் உரிமைகளை மதிக்க வேண்டும் என்பதற்கு இறைத்தூதர் ஏராளமான போதனைகளை வழங்கியுள்ளார்கள். அதேவேளை இந்த வாழ்வியல் உரிமைகளைப் பாதுகாப்பது சமூகத்தின் கடமையாகும் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அரசு உரிமைகளைப் பாதுகாப்பதில் முதன்மைப் பொறுப்பாளியாகும். ஆனால் இவ்விலக்கை நிறைவேற்றுவதற்கு எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் அரசு இருக்குமென்று சொல்ல முடியாது. இந்த இடத்தில் அப்பொறுப்பை இஸ்லாம் சமூகத்தின் தலைவர்கள் மீது சுமத்துகின்றது.

‘’ஒருமுறை நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கு முன் இறை இல்லமாம் கஃபா குறைஷிகளால் புனர்நிர்மானம் செய்யப்பட்டது. சுவனத்தின் அத்தாட்சிகளில் ஒன்றான ஹஜரல் அஸ்வத் என்னும் கருப்புக் கல்லை கஃபாவில் நிறுவுவதில் அக்குறைஷித் தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முடியாமல் விழித்த அந்நேரத்தில் குறைஷிகள் ஒரு தீர்மானத்திற்கு வந்தனர். அதாவது மறுநாள் காலையில் கஃபாவின் வாசல் வழியாக யார் முதலில் நுழைகிறாரோ அவரின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அக்காலை அவர்கள் எதிர்பார்த்த வாயிலினுல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நுழையவே அக்குறைஷிகள் அனைவரும் நம்மிடையே தீர்பளிக்க சரியான ஆள்தான் கிடைத்திருக்கிறார் என்று பெருமிதம் கொண்டனர். நம்மிடையே இந்த முஹம்மது (ஸல்) நீதமாகவே நடந்து கொள்வார். நாம் இவரை அநியாயம் செய்பவராகவோ அநீதி இழைப்பவராகவோ காணவில்லை என ஒவ்வொரு கோத்திரத்தவரும் தீர்ப்பளிப்பதற்கு முஹம்மது (ஸல்) அவர்களை நிபந்தனையின்றி ஆமோதித்தனர். முஹம்மது (ஸல்) அவர்கள் குறைஷிகளிடம் போர்வை ஒன்றை கொண்டுவரச் சொல்லி அக்கல்லை அப்போர்வையின் மீது வைத்து,போர்வையின் ஒவ்வொரு முனையையும் ஓவ்வொரு குறைஷித்தலைவரையும் பிடிக்கவைத்து அந்த கல் கஃபாவில் நிறுவப்பட்டது. குறைஷிகளின் அப்பிரச்சனை முடிந்தது.’’


இச்சம்பவம்,எமது சமகால அரசியல்வாதிகளுக்கும் க்கும்,தலைமைத்துவத்துக்கும் பொருந்துவதோடு ,இலங்கை முஸ்லிம்களுக்காக  ஒரு கூட்டு முயற்சி அல்லது ஒரு விட்டுக்கொடுப்பு, பரஸ்பரம்,சகிப்புத்தன்மையுடன் கொஞ்சம் இடம், மனம்,கை   கொடுத்தால்  நிச்சயம் இது ஒரு சமூக சீர்த்திருத்தத்திட்கு வழி  வகுக்கும்  என்பதில் ஐய்யமில்லை.ஆட்சியாளர்கள், தனிமனிதர்களை வேட்டையாடுவது, சுயநலனுக்காக சமூகத்தை காட்டிக்கொடுப்பது அவர்களின் உடமைகளை அழிப்பது, தனது அரசியல் எதிரி என்பதற்காக உரிமைகளைப் பறிப்பது, அநீதியாகும்.

புராண இதிகாச கதைகளில் கூறுவது போல்   '' ஒருவர் பல குச்சிகளை ஒன்றாக சேர்த்து உடைக்கக் கொடுக்கிறார் அனால் அவர்களால் முடியாமல் போக,பின்பு அவற்றை ஒவ்வொன்றாக பிரித்துக் கொடுக்கிறார் பிறகு அவற்றை இலகுவாக உடைத்துவிட்டனர்’’

இது போன்றுதான் நாம் பல பிரிவுகளாக,கட்சிகளாக,கொள்கைவதிகளாக மறைமுகமான திட்டத்தின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளதனால் எதிரிகளுக்கு  மிகவும் இலகுவான தருணமாக அமைந்தது மாத்திரமன்றி,நம் பலம் பலகீனம் அடைந்துவிட்டது.

முஹாஜிர்கள் என்றும் அன்ஸார்கள் என்றும் இருவேறு பிரிவாக இருந்த அந்த சமூகத்தை ஒரு சமூகமாக இணைக்க வேண்டிய கடப்பாட்டை உணர்ந்த நபி (ஸல்) அவர்கள், அன்ஸார்களளுடன் முஹாஜிர்களை இணைத்து அவர்களை சகோதரர்களாக மாற்றினார்கள். இந்த மாற்றம், தான் அனுபவித்த அழகிய மனைவியர்களை நிறுத்தி இதில் உமக்கு விரும்பியவளைக் கேளுங்கள் நான் அதனை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன் என்று ஒரு அன்ஸாரி சகோதரர் முஹாஜிர் சகோதரரைப் பார்த்துக் கூறும் அளவிற்கு மாறி, அந்த இரு பிரிவினரும் ஒரு தாய் பிள்ளைகள் போன்று மாறினார்கள். இவ்வாறு முஸ்லிம்களிடமிருந்து பிரிவினைகளை நீக்கி சுமூகமான நிலைக்கு கொண்டு வர வேண்டும்.


இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் (3:103)

எமது முஸ்லிம் சமுதாயத்தின் சமகால நிலவரங்கள்,பிரச்சினைகள்,பிளவுகளைக் கருத்திட் கொண்டு நிச்சயம் ஒரு சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக  நின்று    தலைவர்கள்,புத்திஜீவிகள் ஒருகுடையின் கீழ் பயணிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.
நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ அல்லாஹ் உதவி செய்யட்டும்....




No comments:

Post a Comment